வியாழன், 11 மார்ச், 2010

முக்கியமான செய்தி

சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக என்னுடைய பிளாக் url ஐ மாற்றி உள்ளேன்:-)

http://senreb.blogspot.com/

மலர்வனத்தின் பார்வையாளர்கள் சிரமம் பாராமல் இந்தப் புது url க்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் _()_
சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

செய்திக்கு சென்ஸார் வருமா?

சமீபமாக மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் அடிபடுவது சாமியாரைப் பற்றிய செய்தி தான்.

பெட்டிக்கடைகளில் இருந்து ஐடி ஆபீஸ் வரை இது தான் பேச்சாக உள்ளது. திரும்ப திரும்ப பலமுறை ஒரு சினிமாக் காட்சியைப் போன்று மீடியாக்கள் போட்டி போட்டுக் கொண்டு காட்டியது. வந்த விருந்தினர்கள் முன்பு செய்தியைப் பார்க்கவே நெளியும் நிலை. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு செய்தியைக் கூட நாம் பயமின்றி பார்க்க முடியுமாங்கிறது இப்ப சந்தேகமா இருக்கு.

பூட்டிய கதவுக்குள் நடந்தவற்றை அநியாயம், அயோக்கியத்தனம் என்று சொன்னவர்கள், அதை மறைத்து வைத்த காமிராவால் படம் எடுத்தது எந்த அளவு அயோக்கியத்தனம்? அந்த நிகழ்ச்சி ஒன்றும் இன்று, நேற்று புதியதாக நடந்தது போல் தெரியவில்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது மட்டும் வெளியில் வர என்ன காரணமோ? அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்!!

ஒரு சாமியார் இவ்வாறு செய்யலாமான்னு கொதித்து எழும் மக்கள் தானே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியது? சாமியைக் கும்பிடலாம். அதற்கு எதற்கு இடைத்தரகர்கள்? என்னை சாமியாராக்கு, என்னை நம்புன்னு எநத சாமியார் சொல்கிறார்? யாரோ ஒருவர் எதையோ சொல்லப் போக, அதுவும் தற்செயலாக நடக்க அவர் சொல்வதெல்லாம் நடக்குதுன்னு ஒரு கோஷ்டி கிளப்பி விட்டு சுயலாபம் பார்க்கிறாங்க.

மக்களும் அதை நம்பி காசு, பணம்னு கொட்ட வேண்டியது. அப்பறம் அந்த சாமியாரைப் பற்றி ஏதாவது உண்மை தெரிய வரும் போது ஆத்திரப்பட்டு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவது. திருந்தணும்னு நினைச்சிருந்தா ஒரு பிரேமானந்தா பற்றிய உண்மை வந்த போதே, எந்த சாமியார்களையும் மக்கள் ஏறெடுத்தும் பாராமால் இருந்திருந்தால், இன்று இப்படி அவன் அயோக்கியன், இவன் அயோக்கியன்னு சொல்லும் நிலை வந்திருக்குமா? தவறு முழுவதும் தம்மிடம் வைத்துக் கொண்டு ஏமாற்றுவர்களை குறை சொல்லி என்ன பயன்?

ஆங், நான் சொல்ல வந்தது இதுவே இல்லை.

செய்திகள் என்றால் நாட்டு நடப்பு, உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு என்றிருந்த காலம் போய், செய்திக்கிடையே இப்படிப்பட்ட படங்களைக் காட்டினால் பெரியவர்கள், குழந்தைகள்னு உட்கார்ந்து எப்படி செய்திகளைப் பார்ப்பது?

இது போன்ற படங்களைக் காட்டும் செய்திகளுக்கும் இனி சென்ஸார் வருமா?

வெள்ளி, 5 மார்ச், 2010

குறிப்பு திருட்டு

சமீப காலமாக ஏதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவரால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை (சமையல் குறிப்புகள் உட்பட) எடுத்து கொஞ்சம் மாற்றியோ இல்லை அப்படியேவோ தனது பெயரில் வேறு தளத்துக்கு கொடுப்பது அதிகமாகி விட்டது. எதற்காக இந்த திருட்டு வேலை? பெயரும், புகழும் வேண்டியா? அப்படி வேண்டுமாயின், தன் சொந்த குறிப்புகளை, திறமையை கொடுக்க வேண்டியது தானே? இப்படி திருட்டுத்தனம் செய்து பேர் வாங்கச் சொல்லி யார் கேட்கிறார்கள்? கஷ்டப்பட்டு சொந்தக் குறிப்புகள் கொடுத்தவர்களின் மனது என்ன கஷ்டப்படும்?

கொஞ்ச நாள் முன்பு தான் தோழி ஜலீலாவின் குறிப்புகள் எடுக்கப்பட்டு வேறு பிளாக்கே வந்தது என்று சொன்னார்கள். குறிப்புகள் கொடுப்பவர்கள் எல்லாரும் எல்லா இடத்திலும் செக் பண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் நம்மோடு போகாமல், பலருக்கும் பயனளிக்கட்டுமேன்னு தான் சொல்றோம். தேவையானவங்களுக்கு அந்த லின்க்கை கொடுத்து படிக்க சொல்ல வேண்டியதுதானே! தனக்கே வேண்டுமென்றால், பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளட்டுமே! அதை விட்டு என்னவோ தானே கஷ்டப்பட்டு கொடுத்த குறிப்பு போல் கொடுத்து இப்படி பேர் சம்பாரிக்க நினப்பது அவர்களுக்கே கேவலமாக இல்லையா?

எது எதைத்தான் திருடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இன்னும் எவ்வளவு பேர் என்ன சொன்னாலும், இது போல் திருடுபவர்கள் மாறுவது போல் தெரியவில்லை.

அவங்க அவங்க குறிப்புகளை பத்திரமாக லாக்கரில் வைத்து பூட்டி வைத்துக் கொள்ளுங்கப்பா. இப்படி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்:-) திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிறது இதற்கும் பொருந்துமோ?

(அறுசுவை.காம் தளத்தில் உள்ள  என்னுடைய பல குறிப்புகள் பலராலும் திருடப்பட்டு வெவ்வேறு தளங்களில் வேறு பெயர்களால் பதியப்படுவதைக் கண்டு ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடே இந்தப் பதிவு:-( )

வியாழன், 4 மார்ச், 2010

லவ்பேர்ட்ஸ் - இறுதிப் பகுதி !

ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்....

ஒரு முட்டை கூட இல்லை. நாங்களும் முட்டை கெட்டுப் போயிருந்தால் ஓடாவது இருக்குமேன்னு தேடிப் பார்த்தோம். எங்கும் எதுவும் இல்லை. குட்டிம்மா பாவமாக உட்கார்ந்திருந்தது. அப்பறமாகத்தான் கடைக்காரன் சொன்னான், முட்டையை பல்லி சாப்பிட்டு இருக்கும்னு. முதல்லேயே தெரிந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாமேன்னு ஆதங்கமாக இருந்தது.

முட்டை காணாமல் போன கோபத்தில் அம்மா மாதிரியே இதுவும் துணையைக் கொத்த ஆரம்பித்தது. எதற்கு வம்புன்னு ஆண் குருவியைக் கொண்டு போய்க் கொடுத்திட்டோம். கொஞ்ச நாள் தனியாகவே குட்டிம்மா இருந்தது. வீடு மாற்றி புது வீட்டிற்கு வந்தோம். நாங்களே வீடு வேலைகள் நடந்து கொண்டு இருந்ததால், இருக்க இடமின்றி ஒரு ரூமில் அடைந்து கொண்டிருக்க, கூண்டும் நாளுக்கு ஒரு இடமாக இருந்தது.

ரொம்ப பாவமாக இருக்கவே வேறு ஒரு ஆண் குருவி வாங்கி வந்து விட்டோம். அதனோடு ரொம்ப நல்லா விளையாடியது. மீண்டும் குட்டிம்மா இரண்டு முட்டை வைத்தது. இம்முறை ரொம்ப முன் ஜாக்கிரதையாக மயிலிறகை கூண்டு மேல் வைத்து பல்லி வராமல் பாதுகாத்தோம். ஆனாலும் இரண்டு முட்டையும் கெட்டுப் போய் ஒரு நாள் சட்டிக்கு வெளியே தூக்கிப் போட்டு விட்டது. இந்த முறை குட்டிம்மா கோபப்படவில்லை. துணையுடன் எப்போதும் போல் விளையாடியது.

பெண் பிரசவத்திற்கு வந்து பிரசவமும் ஆச்சு. அதன்பின் எனக்கு ரொம்ப முடியாமல் போய் சர்ஜரி செய்ய வேண்டிய நிலை. சர்ஜரி முடிந்து என்னால் எதையும் கவனிக்க முடியாமல் இருந்தது. தினையும், தண்ணீரும் என் கணவர் தான் வைப்பார். என்னைப் பார்த்தாலே கூப்பிடும். பேசி விட்டு போய் விடுவேன்.

என்ன ஆச்சுன்னு தெரியலை. ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால்....என் குட்டிம்மா இறந்து கிடந்தாள்.

என்னால் அழக் கூட முடியவில்லை. நெஞ்செல்லாம் கனக்க குட்டிம்மா வெளியேறினாள். மீதி இருந்த ஒரு குருவியைக் கொடுத்திடலாமான்னு யோசிச்சேன். வேண்டாம், அதற்குத் துணை வாங்கி விடலாம்னு எல்லாரும் சொல்லவே, கொஞ்ச நாட்கள் கழித்து, வேறு ஒரு குருவி வாங்கி விட்டோம். பெண் குருவின்னு கேட்டு வாங்கினோம். பழகி கொஞ்சம் பெரிதானதும் தான் தெரிந்தது, அதுவும் ஆண்குருவி தான்னு.

கொடுத்துட்டு வேறு மாற்ற மனசின்றி இரண்டுக்கும் சேர்த்து இரண்டு பெண்குருவி வாங்கி விடலாம்னு முடிவு செய்தாச்சு. ஆனால், கூண்டு ஒரு ஜோடிக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கு. அதனால் வீட்டு வேலை செய்யும் போது மீதி ஆன மரத்தை வைத்து பெரிய கூண்டு செய்து தரச் சொல்லி தச்சரிடம் சொல்லிக் கொண்டே இருக்கோம். அவரும் இன்றைக்கு, நாளைக்குன்னு நாள் கடத்திகிட்டே இருக்கார்.

இப்போதைக்கு இரண்டு ஆண் குருவிகளும் விளையாடிக் கொண்டு இருக்கு. போன வாரம் வந்த என் பேரனுக்கும் லவ்பேர்ட்ஸ் தான் ரொம்பப் பிடிச்சுது. அதன் சத்தம் கேட்கும் போதெல்லாம் கிட்டே போய்ப் பார்ப்பான். கொத்தமல்லி கொடுத்தால், அவனும் சேர்ந்து கொடுத்தான். அவனுக்கு அதை கையில் தொட்டுப் பார்க்க ரொம்ப ஆசை. அவை பயந்து சட்டிக்குள் போய் உட்கார்ந்து கொண்டன. இதுவே என் குட்டிம்மாவாக இருந்தால், தானே வந்து கையில் உட்கார்ந்து கொள்ளும் :-((

இப்பல்லாம் ரொம்பவும் அதன் அருகில் போய் விளையாடக் கூட கஷ்டமாக இருக்கு.

இவ்வளவுக்கு பின்னும் லவ்பேர்ட்ஸ் ஆசையை விடாமல், இருப்பவற்றை வளர்த்துகிட்டு இருக்கேன். புது கூண்டு செய்து குடும்பம் பெரிதான பின்னர் அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

இப்போதைக்கு லவ்பேர்ட்ஸ் பற்றிய தொடர் நிறைவுறுகிறது:-)

வியாழன், 25 பிப்ரவரி, 2010

எப்படி இருந்த சுடிதார்...

என் பெண் டைலரிடம் ஒரு சுடிதார் தைக்க கொடுத்திருந்தா.

இவள் ஒரு மாடல் சொல்ல, டைலர் ஒரு மாதிரியாக தைத்துக் கொடுக்க.....

பெண்ணுக்குப் பிடிக்கவில்லை அந்த மாடல்.

என்னிடம் கொடுத்து, எதையாவது தைத்து கொஞ்சம் மாற்றிக் கொடுங்கன்னு சொன்னாள்.



சுடிதாரை மாற்ற எனக்குத் தேவையானதாக இருந்தவை.

1) திலக வடிவ டபுள் கலர் குந்தன் ஸ்டோன்.

2) வெள்ளை கலர் குந்தன் ஸ்லோன்.

3) நூல்கண்டு.

4) த்ரி டி மல்ட்டி கலர் அவுட் லைனர்.

5) ஊசி

6) ஃபெவி க்ளூ

7) இரண்டு கைகள் :-))





இப்ப எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க.


நான் மாற்று முன் எப்படி இருந்ததுன்னு போட்டோ எடுக்க மறந்துட்டேன் :-(

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

லக்கியின் பிறந்தநாள்!!

நேற்று (22-02-2010) லக்கியின் இரண்டாவது பிறந்தநாளை இனிமையாகக் கொண்டாடினார். எப்படின்னு பாருங்களேன்!

காலையிலேயே ஷாம்பு போட்டு குளித்து, முடியை நன்கு ப்ரஷ் செய்து, பவுடர் எல்லாம் போட்டு, 'போ' கட்டிக் கொண்டு கேக் வெட்ட தயாராக....
கேக்குக்கு முன்பு உட்கார்ந்திருக்கார்.
எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பதுன்னு படுத்துக் கொண்டு....
கேக் தயாராக இருக்கிறது...
சமத்தாக நாங்க கை(கால்) பிடிக்க கேக் வெட்டும் லக்கி....
நான் கேக் ஊட்ட சாப்பிடுகிறார்.
ஓகே! எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் லக்கி பிறந்தநாளுக்கு கேக் சாப்பிட்டுக்கோங்க:-)

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

மணல் ஓவியம்

தேவையான பொருட்கள்:

1) மணல் ஓவியம் கிட் - 1 அல்லது கருப்பு வெல்வெட் துணி - தேவையான அளவு,
2) விருப்பமான படம்,
3) ஃபெவிக்ளூ - 1,
4) வெள்ளை மணல் (கடைகளில் கிடைக்கும்)
5) தேவையான ஃபேப்ரிக் கலர்கள்,
6) வண்ணம் தீட்ட நெ. 1 பிரஷ் - 1.


செய்முறை:

 1) கிட் என்றால் அதிலேயே படம் வரைந்து இருக்கும். இல்லையென்றால் விருப்பமான படத்தை மஞ்சள் கலர் டிரேஸ் பேப்பர் வைத்து துணியில் வரைந்து கொள்ளவும்.
2) படத்தின் அவுட் லைனைக்குள் ஃபெவிக்ளூவை நன்றாக தடவவும்.


3) வெள்ளை மணலை அதன் மேல் இடைவெளி இன்றி தூவி கையால் அழுத்தி விடவும்.


4) சிறிது நேரம் கழித்து துணியைத் தூக்கி தட்டினால், மேலாக ஒட்டாத மணல் தனியாக வந்து விடும்.


5) பிரஷ்ஷின் பின்புறத்தால் அவுட்லைனை விட்டு வெளியே பிசிறாகத் தெரியும் மணலை சீராக்கவும்.

 
6) ஒரு நாள் முழுதும் நன்கு காய விட்டு, பொருத்தமான ஃபேப்ரிக் கலரை பிரஷ்ஷால் எடுத்து பிசிறின்றி தீட்டவும்.

7) டபுள் ஷேடிங் கூட கொடுக்கலாம்.
 

8) படம் முழுவதும் வண்ணம் தீட்டியபின் நன்கு காய விடவும்.

 

9) விருப்பம் போல் பிரேம் செய்து அழகாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாகவும் கொடுக்கலாம்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 4)


(குட்டிம்மா என் கையில்)

ஆச்சரியம் காத்திருந்தது.......

குட்டிக் குருவி சட்டிக்கு வெளியே வந்து கூண்டுக்குள் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டு இருந்தது!!! அதைத் தொடப் போனால் அம்மா குருவி என்னையே கொத்த வந்தது. போகட்டும்னு விட்டு விட்டாலும் குட்டிக் குருவியை எடுக்காமல் இருக்க முடியலை. அம்மாக் குருவியிடம் வேறு போக்குக் காட்டி குட்டியை கையில் எடுத்தால், கண் மட்டும் பெரிசா திருவிழாவில் காணாமற் போன குழந்தை மாதிரி விழித்தது. அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குட்டிக் குருவி என் கையில் தான் இருக்கும். கையில் வைத்து கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொடுத்தால் அழகாக எடுத்து சாப்பிடும். பழக ஆரம்பித்த பின் நான் வீட்டிற்கு வந்து விட்டாலே என்னைக் கூப்பிட்டு வெளியே எடுக்கச் சொல்லும். நான் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் என் தோள் மீது அல்லது கீபோர்டு மேல் தான் உட்கார்ந்திருக்கும். அம்மா குருவியும் போகுது போன்னு விட்டுடுச்சு. குட்டிம்மாவும், நானும் ஒளிந்தெல்லாம் விளையாடுவோம்.

அம்மா குருவிக்கு என்னாச்சுன்னு தெரியலை. அப்பா குருவியை எப்பப் பார்த்தாலும் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டே இருந்தது. காயமும் ஆகிடுச்சு. எடுத்து மஞ்சள் அரைத்து பத்துப் போட்டு, தனியாக அடைத்து வைத்தோம். குட்டிம்மாவை ஒன்றும் செய்யாது. கொஞ்சம் சரியானது போல் தெரியவே திரும்பவும் கூண்டுக்குள் விட்டோம். நாள் முழுவதும் கொத்தாமல் இருக்கவே சமாதானம் ஆகி விட்டதுன்னு நினைத்தோம். நாங்கள் அனைவரும் அன்று மாலை வெளியே சென்று விட்டோம். திரும்ப வந்து பார்த்தால்....

அப்பா குருவி ரத்த மயமாக நின்று கொண்டு இருந்தது. பதறி வெளியே எடுத்து துடைத்து, மஞ்சள் அரைத்துப் போட்டு தனியாக அடைத்து வைத்தோம். இரவு நாங்கள் படுக்கும் வரை நன்றாகவே இருந்தது. காலையில் எழுந்து பார்த்தால், நாங்கள் முதன் முதலில் வாங்கிய இரண்டாவது குருவியும் உயிரை விட்டிருந்தது....

கண்ணீருடன் அதையும் சட்டியில் புதைத்து வைத்தோம். இனி ஒரு நிமிடமும் அம்மா குருவி வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டேன். என் பையன் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, எங்கள் குட்டிம்மாவுக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆண் குருவியை வாங்கி வந்தான். கலரும் இரண்டும் ஒன்று போல இருந்தது. மெல்ல நாள் போகப் போக குட்டிம்மாவும் வளர்ந்து இறக்கையெல்லாம் முளைச்சாச்சு. துணையுடன் சண்டை போடாமல் பழகியது.

ஒரு நாள் குட்டிம்மா என்னைக் கத்திக் கூப்பிட்டது. என்னவென்று போனால், சட்டிக்குள் போய் தான் இட்ட முட்டையைக் காட்டியது. அதுவும் மூன்று முட்டை வைத்தது. அடையும் காத்தது. ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்.......

வேறு வழி இல்லை, தொடரும் தான்......

புதன், 10 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 3)


பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........

சின்னக் கோலிக்குண்டு சைஸில் பழுப்பு கலரில் ஒரு முட்டை!! ஐ! ஒரு வழியா நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸும் முட்டை வெச்சிருக்குன்னு சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சொன்னாங்க.கூண்டுக்குள் பஞ்சை போட்டு வைங்கன்னு.  கொஞ்சம் பஞ்சை பிய்த்து கூண்டுக்குள் போட்டு வைத்தோம். அதைத் தூக்கிக் கொண்டு போய் சட்டிக்குள் வைத்துக் கொண்டது.

ஒரு நாள் விட்டு அடுத்த நாள் எட்டிப் பார்க்கும் போது இன்னொரு முட்டை. அதே போல் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மூன்றாவது முட்டை. 21 நாட்கள் ஆகும், குஞ்சு பொரிக்கன்னு சொன்னாங்க. அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் மாற்றிமாற்றி சட்டிக்குள் உட்கார்ந்து அடை காத்தது. நாளை எண்னிக் கொண்டே வந்தேன்.

22 வது நாள் காலையில் எழும் போதே ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டது. இஸ்க், இஸ்க்னு மெதுவா கேட்டது. எழுந்து நேரே போய் சட்டியைப் பார்த்தால், விரல் நுனி பெருசுக்கு ஒரு புழு போல் ஒன்று சட்டுக்குள் இருந்தது. மூக்கும், கண்ணும் மட்டும் தான் பெரிசா தெரிந்தது. கண் சரியா விழிக்கலை. ஆனா, வாயைத் திறந்து கொண்டே சத்தம் மட்டும் போட்டுக் கொண்டே இருந்தது.

அம்மாக் குருவி வெளியில் வந்து தினையை எடுத்துப் போய் குட்டிக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்யலைன்னு கொத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு ஓரமாக போய் உட்கார்ந்திருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் போதாமல் குட்டி கத்திகிட்டே இருக்கும்.

அடுத்த ரெண்டு முட்டையும் எப்ப பொரிக்கும்னு பார்த்துகிட்டே இருந்தால் குட்டி வெளியில் வரவே இல்லை..... ஒரு நாள் ஆபீஸ் போய்ட்டு வந்து பார்த்தால், முட்டைகளை சட்டிக்கு வெளியில் தூக்கிப் போட்டு இருந்தது. உள்ளேஒன்றும் இல்லை. முட்டை கெட்டுப் போய்ட்டா, அப்படித்தான் தூக்கிப் போடுமாம். பாவமாக இருந்தது.

அப்பப்ப எட்டிப் பார்க்கும் போதெல்லாம், குட்டிக்குருவிக்கு லேசாக முடி வந்திருக்கும். பார்க்கவே அருவருப்பாக இருப்பது போல் இருக்கும். நாங்க எட்டிப் பார்த்தாலே அம்மாக் குருவி உள்ளே போய் தன் இறகால் குட்டியை மூடிக் கொள்ளும். அம்மாக்குருவி, அப்பாக்குருவி இரண்டுமே மஞ்சள், பச்சை, கருப்பு கலந்த கலர். ஆனால் குட்டி என்னவோ ஊதா வண்ணத்தில் இருப்பது போல் தெரிந்தது. சரியாக முடி வளராததால் என்ன கலர்னு சரியா தெரியலை. ஆனா, ரொம்ப வேகமாக வளர்ந்துகிட்டு வந்தது. எப்படி சட்டியை விட்டு வெளியில் வரும்னு எங்களுக்கெல்லாம்  யோசனையாக இருந்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வந்து பார்த்தால் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது........
இன்னும் வளரும்...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி-2)

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நல்லபடியாகவே வளர்ந்து கொண்டு இருந்தது லவ் பேர்ட்ஸ். கப்பில் தினை தீர்ந்து விட்டால், கப்பை ஆட்டி அழகாக சத்தம் செய்யும். தண்ணீர் வைத்தால் குடித்து விட்டு, உடனே கப்பை தூக்கிப் போட்டு தண்ணீரைக் கொட்டி விடும். ரொம்ப போரடித்தால் அதுகளே கூண்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்து விளையாடும். அதற்காகவே கூண்டின் கதவில் ஒரு கொக்கி மாட்டி வைத்திருப்பேன். இரண்டும் சேர்ந்து அதையும் கழட்ட முயற்சி செய்யும்.

இப்படி இருக்க ஒரு நாள்...
வழக்கம் போல் பையன் கூண்டைத் தூக்கி வைத்து குருவிகளை வெளியில் விட்டு ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்தான். அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லாததால், நான் ரூமில் அவரிடம் பேசிக் கொண்டே சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தேன். ரூம் கதவு லேசாக திறந்திருந்தது. விளையாடிக் கொண்டே இருந்த மஞ்சள் குருவி ரூமில் என் சத்தம் கேட்கவே, உள்ளே பறந்து வந்திருக்கிறது. பறந்த வேகத்தில் கொஞ்சம் உயரமாகவே பறந்து விட்டது.(சாதாரணமாக அவ்வளவு உயரம் பறக்காது). வந்த வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு என் மடியில் வந்து விழுந்தது. ஐயோ என்று கத்திக் கொண்டே அதை எடுத்து, பையனை தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாயில் விட்டேன். எங்குமே காயம் இல்லை. ஆனால், என்னைப பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல கண்களை மூடி உயிரை விட்டு விட்டது.....
பையனும், நானும் அழுத அழுகை கொஞ்சமில்லை. பிரிய மனமின்றி கையில் வைத்து அழுது கொண்டே இருந்தோம். வேறு வழியின்றி செடி போட வைத்திருந்த தொட்டி மண்ணில் ஆழக் குழி தோண்டிப் புதைத்தோம்(நாங்கள் இருந்தது இரண்டாவது மாடியில்).

ஒரு குருவியை இப்படி இழந்து விட்டோம். இன்னொன்றைப் பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது. எங்கள் சோகமும் அதிகமாக இருந்தது. வேறு ஒன்றை வாங்கி விட்டால் கொஞ்சம் சரியாகும் என்றெண்ணினோம். அச்சு அசல் அதே போல் ஒரு குருவியை என் பையன் வாங்கி வந்தான். இம்முறை சரியாக பெண் குருவியைக் கொடுத்தார்கள். 2 நாட்கள் பேசாமல் இருந்த பச்சைக் குருவியும் அதனுடன் நட்பாகி விளையாட ஆரம்பித்தது. கொஞ்ச நாட்கள் ஆனதும், பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........                                                                                                                                                                                           அப்பறம்  சொல்றேனே....

லக்கியின் காத்திருப்பு...

 
சகோதரர். ஹைஸின் பார்சலுக்காக இப்படி காத்திருந்த லக்கி......

இப்படி மாறி காத்திருக்க ஆரம்பித்து.......


இப்ப இப்படி வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டேஏஏஏ.........

புதன், 3 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1

எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.


நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.

பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம்.   மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.

பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.



ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.


எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.

வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,

அந்த சம்பவம் நிகழ்ந்தது......

மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........

வெள்ளி, 29 ஜனவரி, 2010

கேட்டு பதறிய சம்பவம்!


ஆனந்த விகடனில் வெளிவந்ததாக ஆபீசில் சொன்னார்கள். நான் படிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு மயக்க கலக்கத்தில் படுத்துக் கொண்டே பால் கொடுத்ததால், குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாம். அதன் கண்களை தானம் செய்தார்களாம். கண்தானம் செய்யப்பட்ட விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டது. ரொம்ப நாட்களாக என் மனதை வதைத்துக் கொண்டிருந்த படுத்துக் கொண்டே பாலூட்டிய விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் எனக்கு மட்டும் நெருடிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த இடுகை.

நிறைய பெண்கள் செய்யும் தவறே இது தான். எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க சோம்பேறித்தனம். படுத்துக் கொண்டே பால் கொடுப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்று இப்பொழுதாவது மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாவது மூச்சு தாங்கி குடித்து விடும்.  பச்சிளங்குழந்தைகளுக்கு படுத்து கொண்டு பால் கொடுத்தால் மூச்சு முட்டும். அப்படி கொடுக்கும் போது நாம் கையால் அழுத்திப் பிடித்து கொடுக்கவும் முடியாது. அப்படியே தூங்கிப் போனால், பால் குழந்தையின் மூக்கிலும் ஏறும் வாய்ப்பு உள்ளது. பிரசவம் ஆனபின் களைப்பாகவும், மயக்கமாகவும், அசதியாகவும் தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பார்த்து குழந்தையின் விலை மதிக்க முடியாத உயிருடன்
விளையாடலாமா?

எவ்வளவு தூக்கக் கலக்கமாக இருந்தாலும், எழுந்து, நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு (முதுகுக்கு தலையணை கூட வைத்துக் கொள்ளலாம்) குழந்தையின் தலையை முழங்கைக்கு மேல் வைத்து மார்போடு சேர்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.

நீளும் கை குழந்தையின் தொடை வரை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்த கையின் ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே மார்பகத்தை அழுத்திப் பிடித்து குழந்தையின் வாயில் வைத்து பால் புகட்ட வேண்டும்.

பால் அதிகமாக சுரந்தால் பிறந்த குழந்தைகளால் (ஒரு மாதம் வரை) மூச்சு தாங்கி குடிக்க முடியாது. அப்போது விரல்களை நெருக்கிப் பிடித்து பால் குழ்ந்தையின் வாய்க்குள் போகும் அளவை கட்டுப்படுத்த முடியும்.

பால் கொடுத்து முடிந்ததும், குழந்தையை தோளில் சாத்தி முதுகில் சிறிது நேரம் லேசாக தட்டிக் கொடுத்து, (குழந்தைக்கு)ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.

முதல் குழந்தை என்றால் நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாது. கூட இருக்கும் பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்.

நிறைய மருத்துவமனைகளிலும் ஏகப்பட்ட ஃபீஸ் வாங்குகிறார்களே தவிர, பிரசவம் முடிந்தபின் இதையெல்லாம் எந்த  மருத்துவரும் பொறுமையாக விளக்கிச் சொல்வதில்லை. அங்கு இருக்கும் நர்சுகளோ குழந்தைக்கு அம்மாவை பால் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க (சமீபத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆன போது நேர்ந்த அனுபவங்கள் தான்).

கொடுமை என்னவென்றால் கூட இருப்பவர்களும் படுத்துகிட்டே பால் கொடுக்கச் சொல்வார்கள். அதைப் பார்த்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறேன். சரி சரிம்பாங்க. நாம் இந்த பக்கம் வந்ததும் அவங்க வழிக்கு போயிடுவாங்க.நல்லதுக்கு தானே சொன்னார்களென்று தெரிவதில்லை.

இப்பவும் அப்படித்தான், மனம் பொறுக்காமல் கொட்டி விட்டேன். இதைப் படித்து ஒரு சிலராவது புரிந்து கொண்டால் போதும்.

பத்து நிமிட கஷ்டம் பார்த்து
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பறி கொடுத்து விடாதே மகளே!

இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, கிடைத்ததொரு செல்வத்தை நம் சோம்பேறித்தனத்தாலும், அஜாக்கிரதையாலும் இழக்கலாமோ?

செவ்வாய், 26 ஜனவரி, 2010

சமைக்குமுன்....


சமையல்னு தலைப்பைப் பார்த்தவுடன் வழக்கம் போல ஏதாவது குறிப்பா இருக்கும்னு தானே நினைச்சீங்க! அதுவும் உண்டு. அதுக்கு முன்பு சொல்ல வேண்டிய சில விஷயங்களைச் சொல்லிட்டு அப்பறமா குறிப்புகளுக்கு போகிறேனே:-)

சமையல் ஒரு கடல். இதில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரையும் சொல்லவே முடியாது. கொஞ்சமாகத் தெரிந்தாலும், ருசியாக சமைத்து, அழகாக பரிமாறத் தெரிந்தாலே போதும். வகை வகையாக சமைத்து, வாயில் வைக்க முடியாமல், கசகசன்னு பரிமாறினாலும் சாப்பிட தோன்றாது.



சமையலறை எனபது ஒரு பரிசோதனைக்கூடம் போல். ஒரே குறிப்பை, ஒரே அளவு பொருட்களை வைத்து 10 பேர் சமைத்தால், பத்தும் ஒன்று போல் இருக்காது. காய்கறி நறுக்கும் முறை, வதக்கும்(வேகும்) நேரம், அடுப்பின் எரிநிலை பொறுத்து ருசியும் மாறுபடும். இருக்கும் பொருட்களை வைத்து குறுகிய நேரத்தில் வாய்க்கு ருசியாக சமைப்பவர்களை சமையல் கலை நிபுணர்கள் என்றே சொல்லாம்.

சமைக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
சமையலறையில் சமைக்கப் போகும் பெண்ணே, அழகுக் கண்ணே,
சில புத்திமதிகள் சொல்லறேன் கேளு முன்னே :-)

அடுத்த நாளுக்கு என்ன சமையல்னு முந்தின நாளே யோசித்து முடிவு செய்து விட்டால், அடுத்த நாள் மளமளன்னு சமைக்க ஆரம்பிக்க முடியும்.  தேவையான காய்கறி, பொருட்கள் இருக்கான்னு பார்த்து, வேண்டுமானவற்றை வாங்கி வைத்து விடலாம்.

இல்லையென்றாலும் காலையில் எழுந்து பிரஷ் செய்யும் நேரத்தை வீணாக்காமல், யோசித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் லூஸ் ஹேர்தான் ஃபாஷன். அந்த ஃபாஷனை சமையலறையில் மட்டும் தவிர்த்து, எப்போதுமே சமைக்கப் போகும் முன் தலையை தூக்கி வாரி கிளிப் போட்டுக் கொண்டால், சமைக்கும் போது முடி உதிர்ந்து சமைக்கும் பொருட்களில் விழுவதைத் தவிர்க்கலாம்.

1. காய்கறிகளை அழகாக, ஒரே அளவில் சீராக நறுக்கினாலே சமையல் பார்க்க நன்றாக இருக்கும்.

2. சமைக்க வேண்டிய பொருட்களை (நறுக்கிய காய்கறிகள், எண்ணெய், மசாலாப் பொருட்கள், பாத்திரம்) தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமைக்க ஆரம்பித்தால், அடுப்பில் வைத்தது தீயாமல், குறுகிய நேரத்தில் சமைக்க முடியும்.
3. அரைத்து செய்யும் சமையலாக இருந்தால், அரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. ஊற வைத்து செய்வதாக இருந்தால் முன்பே ஊற வைத்து தயாரான பின் சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.
5. பாத்திரத்தை பிடிப்பதற்கான டவலையோ, இடுக்கியையோ பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
6. அடுப்பை எப்போதும் மிதமான தீயில் வைத்து சமைக்க பழக வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே ஏற்றி வைக்க வேண்டும். பொருளும் தீய்ந்து போகாது, காஸும் மிச்சமாகும். (இப்போது இருக்கும் விலைவாசியில் 4 நாட்கள் கூட கேஸ் வந்தாலே கணவரிடம் ஒரு குட் வாங்கலாமே!)
7. காய்களின் தோல், வெங்காயத்தோல்  முதலியவற்றை நறுக்கி முடித்தவுடன் அதற்கான குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால் கிச்சன் முழுக்க ஓடாது.
8. சமைக்கும் போது காட்டன் துணி வகைகளையே உடுத்த வேண்டும். இல்லையேல் மேலே ஏப்ரான் கட்டிக் கொள்ளலாம்.
9. உபயோகித்த பின் கழுவ வேண்டிய பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுமிடத்தில் போட்டு விட்டால், இடம் நிறைய இருப்பது போல் இருக்கும் (சில பேர் சமைத்து முடித்தபின் சமையலறையைப் பார்த்தால் ஒரு போர்க்களம் போல் இருக்கும்).
10. மிளகாய், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் முதலியவற்றை எடுத்த பின் மறக்காமல் கைகழுவி விட்டால், பிறகு கண்ணைக் கசக்கிக் கொண்டு இருக்கும் அவசியம் இருக்காது.
11. பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சமைப்பதாக இருந்தால் அரை மணி முன்பே வெளியே எடுத்து வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
12. எப்போதும் சமைக்கும் போது ஒரு ஜக்கில் தண்ணீர் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
13. வேலைக்கு செல்லும் பெண்கள் வார விடுமுறை அன்றே தேங்காயைத் துருவி கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கி பிரீஸரில் வைத்துக் கொள்ளலாம்.
14. அடுத்த 2 நாட்களுக்கு தேவையான வெங்காயம், பூண்டை உரித்து ட்ப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கலாம்.
15. இஞ்சி, பூண்டு பேஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
16. புளிக்கரைல் செய்து, சிறிது உப்பு போட்டு கலக்கி பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
17. முந்தின நாள் இரவே காய்களை நறுக்கி டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
18. கொஞ்சம் வெங்காய சட்னி, வத்தக் குழம்பு செய்து பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் சமயத்துக்கு உதவும்.
19. மொத்தமாக இட்லிக்கு மாவு அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரேயடியாக இட்லிக்கு என்றில்லாமல், அடை, ஆப்பம், பணியாரம், காஞ்சீபுரம் இட்லி என பிரித்து அரைத்து வைத்துக் கொண்டால் வெரைட்டியாக செய்ய முடியும். (இரவும் டிபன் செய்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்).
20. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து டப்பாவில் போட்டு மேலாக சுத்தமான துணியால் மூடி, டப்பாவை மூடி வைத்தால் 3 நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

...இன்னும் மணக்கும்.

தமிழ்த்தாய் மன்னிப்பாளாக!

வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மலர்வனம் பற்றி...

மலர்வனத்தில் பல வண்ண மலர்கள் உண்டு. இவ்வலைப்பூவிலும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.

எனக்குத் தெரிந்த சமையல், கைவேலைப்பாடுகள், கர்ப்பிணி மற்றும் பேறுகால விஷயங்கள், குழந்தை வளர்ப்பு, வாழ்க்கை அனுபவங்கள், புலம்பல்கள் எல்லாம் இடம் பெறும்.

எனக்குத் தெரிந்த சில விஷயங்கள் என்னோடு முடிந்து விடாமல் நிறைய பேருக்கு பலனளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் டைரியாக எழுதி வைத்தால் என் குழந்தைகள் மட்டுமே பயன் பெறுவர். அது கூட சந்தேகம் தான்:-) இப்போதெல்லாம் யார் படிக்க விரும்புகிறார்கள்? எதற்கெடுத்தாலும் கம்ப்யூட்டரும், நெட்டும் தான்.  எனவே வலைப்பூவாக இருந்தால், என் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, அவர்களைப் போல் உள்ள மற்றவருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தின் விளைவாக மலர்ந்ததே இந்த 'மலர்வனம்'.

மற்றபடி வலைப்பூ உலகில் பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.

ஆனாலும் மணம் நுகர்ந்து செல்பவர்கள், மணத்தின் தன்மையை சொல்லிப் போனால், மலர்வனத்தை மாற்றி அமைத்து அதிக நறுமணம் கமழச் செய்ய ஏதுவாக இருக்கும்.

அன்புடன்,
செந்தமிழ்.

புதன், 20 ஜனவரி, 2010

வணக்கம் !

ப்ரியமானவர்களுக்கு,
என்னுடைய மலர்வனத்திற்கு வருகை புரியும் அனைவரையும் பூச்செண்டுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்,
செந்தமிழ்.