வியாழன், 25 பிப்ரவரி, 2010

எப்படி இருந்த சுடிதார்...

என் பெண் டைலரிடம் ஒரு சுடிதார் தைக்க கொடுத்திருந்தா.

இவள் ஒரு மாடல் சொல்ல, டைலர் ஒரு மாதிரியாக தைத்துக் கொடுக்க.....

பெண்ணுக்குப் பிடிக்கவில்லை அந்த மாடல்.

என்னிடம் கொடுத்து, எதையாவது தைத்து கொஞ்சம் மாற்றிக் கொடுங்கன்னு சொன்னாள்.



சுடிதாரை மாற்ற எனக்குத் தேவையானதாக இருந்தவை.

1) திலக வடிவ டபுள் கலர் குந்தன் ஸ்டோன்.

2) வெள்ளை கலர் குந்தன் ஸ்லோன்.

3) நூல்கண்டு.

4) த்ரி டி மல்ட்டி கலர் அவுட் லைனர்.

5) ஊசி

6) ஃபெவி க்ளூ

7) இரண்டு கைகள் :-))





இப்ப எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க.


நான் மாற்று முன் எப்படி இருந்ததுன்னு போட்டோ எடுக்க மறந்துட்டேன் :-(

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

லக்கியின் பிறந்தநாள்!!

நேற்று (22-02-2010) லக்கியின் இரண்டாவது பிறந்தநாளை இனிமையாகக் கொண்டாடினார். எப்படின்னு பாருங்களேன்!

காலையிலேயே ஷாம்பு போட்டு குளித்து, முடியை நன்கு ப்ரஷ் செய்து, பவுடர் எல்லாம் போட்டு, 'போ' கட்டிக் கொண்டு கேக் வெட்ட தயாராக....
கேக்குக்கு முன்பு உட்கார்ந்திருக்கார்.
எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பதுன்னு படுத்துக் கொண்டு....
கேக் தயாராக இருக்கிறது...
சமத்தாக நாங்க கை(கால்) பிடிக்க கேக் வெட்டும் லக்கி....
நான் கேக் ஊட்ட சாப்பிடுகிறார்.
ஓகே! எல்லாரும் அவங்க அவங்க வீட்டில் லக்கி பிறந்தநாளுக்கு கேக் சாப்பிட்டுக்கோங்க:-)

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

மணல் ஓவியம்

தேவையான பொருட்கள்:

1) மணல் ஓவியம் கிட் - 1 அல்லது கருப்பு வெல்வெட் துணி - தேவையான அளவு,
2) விருப்பமான படம்,
3) ஃபெவிக்ளூ - 1,
4) வெள்ளை மணல் (கடைகளில் கிடைக்கும்)
5) தேவையான ஃபேப்ரிக் கலர்கள்,
6) வண்ணம் தீட்ட நெ. 1 பிரஷ் - 1.


செய்முறை:

 1) கிட் என்றால் அதிலேயே படம் வரைந்து இருக்கும். இல்லையென்றால் விருப்பமான படத்தை மஞ்சள் கலர் டிரேஸ் பேப்பர் வைத்து துணியில் வரைந்து கொள்ளவும்.
2) படத்தின் அவுட் லைனைக்குள் ஃபெவிக்ளூவை நன்றாக தடவவும்.


3) வெள்ளை மணலை அதன் மேல் இடைவெளி இன்றி தூவி கையால் அழுத்தி விடவும்.


4) சிறிது நேரம் கழித்து துணியைத் தூக்கி தட்டினால், மேலாக ஒட்டாத மணல் தனியாக வந்து விடும்.


5) பிரஷ்ஷின் பின்புறத்தால் அவுட்லைனை விட்டு வெளியே பிசிறாகத் தெரியும் மணலை சீராக்கவும்.

 
6) ஒரு நாள் முழுதும் நன்கு காய விட்டு, பொருத்தமான ஃபேப்ரிக் கலரை பிரஷ்ஷால் எடுத்து பிசிறின்றி தீட்டவும்.

7) டபுள் ஷேடிங் கூட கொடுக்கலாம்.
 

8) படம் முழுவதும் வண்ணம் தீட்டியபின் நன்கு காய விடவும்.

 

9) விருப்பம் போல் பிரேம் செய்து அழகாக மாட்டலாம். பிரியமானவர்களுக்கு பரிசாகவும் கொடுக்கலாம்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 4)


(குட்டிம்மா என் கையில்)

ஆச்சரியம் காத்திருந்தது.......

குட்டிக் குருவி சட்டிக்கு வெளியே வந்து கூண்டுக்குள் இங்கும் அங்கும் நடை பயின்று கொண்டு இருந்தது!!! அதைத் தொடப் போனால் அம்மா குருவி என்னையே கொத்த வந்தது. போகட்டும்னு விட்டு விட்டாலும் குட்டிக் குருவியை எடுக்காமல் இருக்க முடியலை. அம்மாக் குருவியிடம் வேறு போக்குக் காட்டி குட்டியை கையில் எடுத்தால், கண் மட்டும் பெரிசா திருவிழாவில் காணாமற் போன குழந்தை மாதிரி விழித்தது. அதன் பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குட்டிக் குருவி என் கையில் தான் இருக்கும். கையில் வைத்து கொத்தமல்லித் தழையை நறுக்கிக் கொடுத்தால் அழகாக எடுத்து சாப்பிடும். பழக ஆரம்பித்த பின் நான் வீட்டிற்கு வந்து விட்டாலே என்னைக் கூப்பிட்டு வெளியே எடுக்கச் சொல்லும். நான் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை பார்த்தாலும் என் தோள் மீது அல்லது கீபோர்டு மேல் தான் உட்கார்ந்திருக்கும். அம்மா குருவியும் போகுது போன்னு விட்டுடுச்சு. குட்டிம்மாவும், நானும் ஒளிந்தெல்லாம் விளையாடுவோம்.

அம்மா குருவிக்கு என்னாச்சுன்னு தெரியலை. அப்பா குருவியை எப்பப் பார்த்தாலும் துரத்தி துரத்தி கொத்திக் கொண்டே இருந்தது. காயமும் ஆகிடுச்சு. எடுத்து மஞ்சள் அரைத்து பத்துப் போட்டு, தனியாக அடைத்து வைத்தோம். குட்டிம்மாவை ஒன்றும் செய்யாது. கொஞ்சம் சரியானது போல் தெரியவே திரும்பவும் கூண்டுக்குள் விட்டோம். நாள் முழுவதும் கொத்தாமல் இருக்கவே சமாதானம் ஆகி விட்டதுன்னு நினைத்தோம். நாங்கள் அனைவரும் அன்று மாலை வெளியே சென்று விட்டோம். திரும்ப வந்து பார்த்தால்....

அப்பா குருவி ரத்த மயமாக நின்று கொண்டு இருந்தது. பதறி வெளியே எடுத்து துடைத்து, மஞ்சள் அரைத்துப் போட்டு தனியாக அடைத்து வைத்தோம். இரவு நாங்கள் படுக்கும் வரை நன்றாகவே இருந்தது. காலையில் எழுந்து பார்த்தால், நாங்கள் முதன் முதலில் வாங்கிய இரண்டாவது குருவியும் உயிரை விட்டிருந்தது....

கண்ணீருடன் அதையும் சட்டியில் புதைத்து வைத்தோம். இனி ஒரு நிமிடமும் அம்மா குருவி வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லி விட்டேன். என் பையன் அதைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, எங்கள் குட்டிம்மாவுக்கு ஏற்ற மாதிரி ஒரு ஆண் குருவியை வாங்கி வந்தான். கலரும் இரண்டும் ஒன்று போல இருந்தது. மெல்ல நாள் போகப் போக குட்டிம்மாவும் வளர்ந்து இறக்கையெல்லாம் முளைச்சாச்சு. துணையுடன் சண்டை போடாமல் பழகியது.

ஒரு நாள் குட்டிம்மா என்னைக் கத்திக் கூப்பிட்டது. என்னவென்று போனால், சட்டிக்குள் போய் தான் இட்ட முட்டையைக் காட்டியது. அதுவும் மூன்று முட்டை வைத்தது. அடையும் காத்தது. ஒரு நாள் முட்டைகள் எப்படி இருக்குன்னு சட்டிக்குள் எட்டிப் பார்த்தால்.......

வேறு வழி இல்லை, தொடரும் தான்......

புதன், 10 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி - 3)


பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........

சின்னக் கோலிக்குண்டு சைஸில் பழுப்பு கலரில் ஒரு முட்டை!! ஐ! ஒரு வழியா நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸும் முட்டை வெச்சிருக்குன்னு சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சொன்னாங்க.கூண்டுக்குள் பஞ்சை போட்டு வைங்கன்னு.  கொஞ்சம் பஞ்சை பிய்த்து கூண்டுக்குள் போட்டு வைத்தோம். அதைத் தூக்கிக் கொண்டு போய் சட்டிக்குள் வைத்துக் கொண்டது.

ஒரு நாள் விட்டு அடுத்த நாள் எட்டிப் பார்க்கும் போது இன்னொரு முட்டை. அதே போல் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மூன்றாவது முட்டை. 21 நாட்கள் ஆகும், குஞ்சு பொரிக்கன்னு சொன்னாங்க. அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் மாற்றிமாற்றி சட்டிக்குள் உட்கார்ந்து அடை காத்தது. நாளை எண்னிக் கொண்டே வந்தேன்.

22 வது நாள் காலையில் எழும் போதே ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டது. இஸ்க், இஸ்க்னு மெதுவா கேட்டது. எழுந்து நேரே போய் சட்டியைப் பார்த்தால், விரல் நுனி பெருசுக்கு ஒரு புழு போல் ஒன்று சட்டுக்குள் இருந்தது. மூக்கும், கண்ணும் மட்டும் தான் பெரிசா தெரிந்தது. கண் சரியா விழிக்கலை. ஆனா, வாயைத் திறந்து கொண்டே சத்தம் மட்டும் போட்டுக் கொண்டே இருந்தது.

அம்மாக் குருவி வெளியில் வந்து தினையை எடுத்துப் போய் குட்டிக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்யலைன்னு கொத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு ஓரமாக போய் உட்கார்ந்திருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் போதாமல் குட்டி கத்திகிட்டே இருக்கும்.

அடுத்த ரெண்டு முட்டையும் எப்ப பொரிக்கும்னு பார்த்துகிட்டே இருந்தால் குட்டி வெளியில் வரவே இல்லை..... ஒரு நாள் ஆபீஸ் போய்ட்டு வந்து பார்த்தால், முட்டைகளை சட்டிக்கு வெளியில் தூக்கிப் போட்டு இருந்தது. உள்ளேஒன்றும் இல்லை. முட்டை கெட்டுப் போய்ட்டா, அப்படித்தான் தூக்கிப் போடுமாம். பாவமாக இருந்தது.

அப்பப்ப எட்டிப் பார்க்கும் போதெல்லாம், குட்டிக்குருவிக்கு லேசாக முடி வந்திருக்கும். பார்க்கவே அருவருப்பாக இருப்பது போல் இருக்கும். நாங்க எட்டிப் பார்த்தாலே அம்மாக் குருவி உள்ளே போய் தன் இறகால் குட்டியை மூடிக் கொள்ளும். அம்மாக்குருவி, அப்பாக்குருவி இரண்டுமே மஞ்சள், பச்சை, கருப்பு கலந்த கலர். ஆனால் குட்டி என்னவோ ஊதா வண்ணத்தில் இருப்பது போல் தெரிந்தது. சரியாக முடி வளராததால் என்ன கலர்னு சரியா தெரியலை. ஆனா, ரொம்ப வேகமாக வளர்ந்துகிட்டு வந்தது. எப்படி சட்டியை விட்டு வெளியில் வரும்னு எங்களுக்கெல்லாம்  யோசனையாக இருந்தது.

ஒரு நாள் காலையில் எழுந்து வந்து பார்த்தால் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது........
இன்னும் வளரும்...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் (பகுதி-2)

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நல்லபடியாகவே வளர்ந்து கொண்டு இருந்தது லவ் பேர்ட்ஸ். கப்பில் தினை தீர்ந்து விட்டால், கப்பை ஆட்டி அழகாக சத்தம் செய்யும். தண்ணீர் வைத்தால் குடித்து விட்டு, உடனே கப்பை தூக்கிப் போட்டு தண்ணீரைக் கொட்டி விடும். ரொம்ப போரடித்தால் அதுகளே கூண்டைத் திறந்து கொண்டு வெளியில் வந்து விளையாடும். அதற்காகவே கூண்டின் கதவில் ஒரு கொக்கி மாட்டி வைத்திருப்பேன். இரண்டும் சேர்ந்து அதையும் கழட்ட முயற்சி செய்யும்.

இப்படி இருக்க ஒரு நாள்...
வழக்கம் போல் பையன் கூண்டைத் தூக்கி வைத்து குருவிகளை வெளியில் விட்டு ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்தான். அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லாததால், நான் ரூமில் அவரிடம் பேசிக் கொண்டே சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தேன். ரூம் கதவு லேசாக திறந்திருந்தது. விளையாடிக் கொண்டே இருந்த மஞ்சள் குருவி ரூமில் என் சத்தம் கேட்கவே, உள்ளே பறந்து வந்திருக்கிறது. பறந்த வேகத்தில் கொஞ்சம் உயரமாகவே பறந்து விட்டது.(சாதாரணமாக அவ்வளவு உயரம் பறக்காது). வந்த வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு என் மடியில் வந்து விழுந்தது. ஐயோ என்று கத்திக் கொண்டே அதை எடுத்து, பையனை தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாயில் விட்டேன். எங்குமே காயம் இல்லை. ஆனால், என்னைப பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல கண்களை மூடி உயிரை விட்டு விட்டது.....
பையனும், நானும் அழுத அழுகை கொஞ்சமில்லை. பிரிய மனமின்றி கையில் வைத்து அழுது கொண்டே இருந்தோம். வேறு வழியின்றி செடி போட வைத்திருந்த தொட்டி மண்ணில் ஆழக் குழி தோண்டிப் புதைத்தோம்(நாங்கள் இருந்தது இரண்டாவது மாடியில்).

ஒரு குருவியை இப்படி இழந்து விட்டோம். இன்னொன்றைப் பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது. எங்கள் சோகமும் அதிகமாக இருந்தது. வேறு ஒன்றை வாங்கி விட்டால் கொஞ்சம் சரியாகும் என்றெண்ணினோம். அச்சு அசல் அதே போல் ஒரு குருவியை என் பையன் வாங்கி வந்தான். இம்முறை சரியாக பெண் குருவியைக் கொடுத்தார்கள். 2 நாட்கள் பேசாமல் இருந்த பச்சைக் குருவியும் அதனுடன் நட்பாகி விளையாட ஆரம்பித்தது. கொஞ்ச நாட்கள் ஆனதும், பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........                                                                                                                                                                                           அப்பறம்  சொல்றேனே....

லக்கியின் காத்திருப்பு...

 
சகோதரர். ஹைஸின் பார்சலுக்காக இப்படி காத்திருந்த லக்கி......

இப்படி மாறி காத்திருக்க ஆரம்பித்து.......


இப்ப இப்படி வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டேஏஏஏ.........

புதன், 3 பிப்ரவரி, 2010

லவ் பேர்ட்ஸ் - பகுதி 1

எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.


நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.

பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம்.   மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.

பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.



ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.


எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.

வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,

அந்த சம்பவம் நிகழ்ந்தது......

மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........